Saturday, July 2, 2011

*சாது சுவாமிகளும் சித்பவானந்தரும்

சுவாமி சித்பவானந்தர் சொன்னது:

"பழனியில் சாது சுவாமி என்று அழைக்கப்படும் ஒரு சாமிக்கு அதிக மதிப்புண்டு. அவர் சொல்லியபடி எல்லாரும் நடப்பார்கள். ஒரு நாள் மலைமேல் சாமி தரிசனம் செய்துவிட்டு படிகளில் இறங்கிக்கொண்டிருந்தேன்; எதிரே சாது சாமி வந்தார். திரும்பவும் என்னை மேலே அழைத்துச்சென்று, மூலஸ்தானத்திற்குக் கூட்டிச் சென்றார். முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 'என்ன அலங்காரம் வேண்டும்?' என்று என்னிடம் கேட்டார். 'நமக்கேற்றார்போல்...' என்றேன். ராஜ அலங்காரத்தைக் கலைத்து கோவணம் கட்டி விபூதி பூசினார்கள். 'இங்கே அமர்ந்து தியானம் செய்' என்று சொல்லிவிட்டு, 'யாரும் அரைமணி நேரம் உள்ளே செல்லக்கூடாது' என்று அர்ச்சகர்களிடம் உத்தரவு பிறப்பித்துவிட்டார். அருமையான தியானம்!"

"ஒருமுறை 'பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்' என்றார் சாது சுவாமிகள். 108 குடம் எண்ணெய், லாரி லாரியாக தயிர், பால், பஞ்சாமிர்தம் என்று அபிஷேகம் செய்த பொருட்கள் அடிவாரம் வரை வழிந்தோடியது. சாது சாமி சொன்னதை பக்தர்கள் அப்படியே நிறைவேற்றுவார்கள். 'இது அனாவசியச் செலவு. பொருட்களை இவ்வாறு வீண் விரயம் செய்யக்கூடாது' என்றேன். அவரும் ஏற்றுக்கொண்டார். அதன்பின் அவ்வாறு அபிஷேகம் நடக்கவில்லை" என்றார் சுவாமிஜி.

No comments:

Post a Comment