Monday, September 26, 2011

*வருந்துகிறோம்


1979 – 80 ஆம் ஆண்டு நம் பள்ளியில் பயின்ற பழைய மாணவர் P. மணிமாறன், விடுதி எண் 427 திருச்சியில் கட்டுமான சங்கத்தின் தலைவராக(Chairman of Builders Association) இருந்தார். இச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் டெல்லி சென்றிருந்தார். சக பொறியாளர்களுடன் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றார். அப்போது அவர் சென்ற விமானம் நேற்று காலை விபத்துக்குள்ளானதில் அவரை நாம் இழக்க வேண்டிய துக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளதற்கு அனைவரும் மிகவும் வருந்துகிறோம். சுவாமி சித்பவானந்தரின் திருவடியில் அவரது ஆத்மா இளைப்பாற நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக. அவர் தம் குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பிக்கிறோம்.

இப்படிக்கு,
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை.

Wednesday, September 21, 2011

*Thirupparaithurai Temple Renovation - 1


திருப்பராய்த்துறை தல புராணம்

காவிரியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களில், திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் மிகவும் தொன்மையானது. இங்கு காவிரி மிகவும் அகலமாக ஓடுவதால் அகண்ட காவிரி எனப்படுகிறது. பராய் மரங்கள் அதிக அளவில் இருந்ததால், இந்த ஊர் திருப்பராய்த்துறை என்றானது.

அகண்ட காவேரி


முன்னொரு காலத்தில் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த தாருகாவன முனிவர்கள், தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள் என்ற மமதையும், தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்ற ஆணவமும், தங்கள் பத்தினிகளே கற்புக்கரசிகள் என்கிற அகங்காரமும் கொண்டிருந்தனர். மேலும், இதனால் தாங்கள் இறைவனை துதிக்க வேண்டியதில்லை என்றும் ஆணவம் அவர்களுக்கு உருவானது.

அவர்களுக்கு பாடம் புகட்ட சிவனும், மகாவிஷ்ணுவும் எண்ணினர். சிவபெருமான் காண்பவர்களை கவரும் பேரழகுடன், கையில் திருவோடு ஏந்தி பிட்சாடனர் வேடம் தரிக்க, மகாவிஷ்ணு அழகிய மோகினி உருவம் கொண்டார். இருவரும் தாருகாவனம் செல்ல, பெண் வடிவில் வந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கிய முனிவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அதேபோல் சிவனின் பேரழகை கண்ட முனிவர்களின் மனைவியர், கற்புநெறி மறந்து அவர் பின்னால் செல்லத் தொடங்கினர்.

பிட்சாடனர்
தங்களது மனைவிகள் பிட்சாடனர் பின்னால் செல்வதைக் கண்ட முனிவர்கள், அவரை அங்கிருந்து விரட்டினர். ஆனால் அவர் செல்ல மறுத்துவிட்டர். முனிவர்கள் அவரை அழிக்க யாகம் செய்து, யாக குண்டத்திலிருந்து தோன்றிய புலிகளை ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று தோலை ஆடையாக்கிக் கொண்டார். பின்னர் பாம்பையும், பூதகணங்களையும் ஏவினர். எதைச் செய்தும் அவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. அவரை அழிக்க முடியாமல் முனிவர்கள் குழம்பி நின்றபோது, சிவபெருமான் அவர்கள் முன் காட்சியளித்தார்.  வந்தவர் இறைவன் என்பதை அறிந்த முனிவர்கள் அவரிடம் தஞ்சமடைந்து, தங்களை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டனர். சிவபெருமான் அவர்களுக்கு குருவாக இருந்து மன்னித்து, தாருகாவனேஸ்வரராக, சுயம்புலிங்கமாக மாறி காட்சியளித்தார்.

திருப்பராய்த்துறை திருக்கோயில்
கும்பாபிஷேகத் திருப்பணி

அன்பர்களே,
திருப்பராய்த்துறைக்கு, சுவாமி சித்பவானந்தர் அவர்கள் 1940 ஆம் ஆண்டு வந்த பொழுது ஸ்ரீ தாருகாவனேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வித்தார். அதன்பின் 1998 ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு விழா சமயத்தில் நாம் அனைவரும் கூடி கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றோம். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கும்பாபிஷேகத்தின் முதற்கட்டமாக 31.08.2011 அன்று பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கியுள்ளன.

தபோவன பழைய மாணவர்களும், அன்பர்களும் கும்பாபிஷேக திருப்பணிக்காக நன்கொடையளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கங்கள்.



கும்பாபிஷேகத் திருப்பணிக்கு நன்கொடைகள்

SRI RAMAKRISHNA TAPOVANAM,
THIRUPPARAITHURAI

என்ற பெயருக்கு திருச்சியில் மாற்றதக்கவகையில் DD அல்லது Cheque  எடுத்து கீழ்கண்ட ஈரோடு முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு 80G வரிவிலக்கு உண்டு.

Dr. R. குமாரசுவாமி,
பேபி மருத்துவமனை,
171, நேதாஜி ரோடு,
ஈரோடு – 638 001.
#98427 26272.

Friday, September 16, 2011

*டில்லிக்கு ராஜா


திரு. V. லட்சுமணசாமி
விடுதி எண்.173 (1977-78)

1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சனிக்கிழமை. மதியம் நானும் என் நண்பர்களும் மாமரத்தடியில் விளையாடிக் கொண்டருந்தோம். திடீரென்று காவல்துறை ‘சைரன்’ ஒலி காதைப் பிளந்தது. மத்திய அமைச்சரும், சுவாமிஜியின் அண்ணன் மகனும், அப்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான திரு.C. சுப்ரமண்யம் பந்தோபஸ்து படை, கூட்டணிக்கட்சித் தலைவர்கள் புடைசூழ பல கார்கள், வேன்கள் சூழ விடுதிக்குள் நுழைந்தார். சுவாமிஜி மாடியிலிருந்து இந்த ஆடம்பர நுழைவை பார்த்துவிட்டார். மரியாதை நிமித்தமாக திரு. C.S. சுவாமிஜியைப் பார்க்க மாடிக்குச் சென்றார். சுவாமிஜி கோபத்துடன், “முதலில் உன் படைகள், பரிவாரங்கள், பந்தோபஸ்துகளை வெளியே அனுப்பிவிட்டு தனியே இங்கு வரலாம்” என்றார். உடனே திரு. C.S. கீழே வந்து அவருடன் வந்த ஜீப்கள், கார்கள், வேன்கள், கட்சிக்காரர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு தனி மனிதராக சாலையிலிருந்து நடந்து வந்து மாடிக்குச் சென்று சுவாமியிடம் ஆசி பெற்றார். முற்றும் துறந்த சுவாமிக்கு அரசனும் ஆண்டியும் ஒன்றே என்ற கருத்தைப் புரிந்துகொண்டேன்.